Monday, May 28, 2012

ஆஹா... பழைய சோறு!


‘மீந்து போன வடித்த சாதத்தில்  கட்டியில்லாமல் கிளறி 2 சொம்பு தண்ணீர் ஊற்றி வைத்து மறுநாள் புளிப்புச் சுவையோடு இருக்கும் பழைய சோற்றை, உப்புக்கல்லுடன் எண்ணையில் வதக்கி எடுத்த பச்சை மிளகாயுடன் ஒரு கட்டு கட்டினால் அமிர்தம்போல இருக்கும்’ என்று சிலாகித்து பேசுவார் குச்சனூரில் இருந்து சென்னையில் செட்டிலான அன்பர் ஒருவர்.

நாகரிக நெருக்கடியில் நாம் தொலைத்த பாரம்பரிய உணவுகளில் ‘பழைய சோறு’ம் ஒன்று. பாலீஷ் செய்யப்பட்ட அரிசி, குக்கர் சமையல், ரசாயன உரங்கள் தெளிக்கப்பட்ட புதுப்புது ரக அரிசி போன்றவற்றால் நகரங்களில்  பழைய சோறு சுவைப்பது அரிதாகிப் போனது.

சென்னை அரசு பொது மருத்துவமனையில் குடல் நோய் அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் மனோகரன். தஞ்சாவூர்க்காரர். அமைதியான முகம். புன்னகை தவழ நோயாளிகளிடம் கனிவுடன் பேசுவது அவரது தனிச்சிறப்பு.
‘டாக்டர், இஞ்சி, பூண்டு, மிளகு இதெல்லாம் உணவில சேர்த்துக்கலாமா?’ என கேட்டாலே ‘அதெல்லாம் தெரியாது. நான் கொடுக்கிற மருந்தை மட்டும் சாப்பிடுங்க’ எனக் கூறும் அலோபதி மருத்துவர்கள் மத்தியில் டாக்டர் மனோகரன் வித்தியாசமானவர். எதை உண்பது, எப்படி உண்பது என்பது தொடங்கி பல பாரம்பரிய உடல்நல குறிப்புகளை நோயாளிகளுக்கு டிப்ஸ் ஆக தருவார். மருந்துகளைக்காட்டிலும் அவர் தரும் ஆரோக்கிய குறிப்புகள் அற்புதம்.
அவர் சொன்ன பழைய சோறின் ஆரோக்கிய ரகசியம் இதோ: ‘காலையில எழுந்து காபி, டீ சாப்பிடாம, ‘நீராகாரம்’ அல்லது பழைய சோறு சாப்பிட்டால் நமது உடலுக்கு நாள் முழுவதும் நல்லது. நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்த பழைய சோறு உண்ணும் போது நமது குடல், நல்ல பாக்டீரியாக்களால் பாதுகாக்கப்படுகிறது. அதன்பிறகு, நாம் எது சாப்பிட்டாலும்  குடலுக்கு பாதிப்பு வருவதில்லை. பழைய சோறில் இயற்கையாகவே இருக்கும் வைட்டமின் சத்து உடலுக்கு ஆரோக்கியம் தரும்’ என்கிறார்.
கார்ன்பிளேக்ஸ், பனீர் என சாப்பிட்டு பழகிப்போன குழந்தைகளுக்கு ‘பழைய சோறு’ பழக்கப்படுத்தலாம் என குக்கர் சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்தால் மறுநாள் நொதித்துப்போய் ஒருவித நாற்றத்துடன் பழைய சோறு இருந்தது. அது ஏன்?.
‘அரிசியை பாலீஸ் செய்வதும், நெற் பயிரில் ரசாயன உரம், பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்துவதால் இப்போது பழைய சோறு கெட்டுப் போகிறது. பழைய சோறு, உடலுக்கு குளிர்ச்சி தரும். இதில் உள்ள புளிப்புத்தன்மை, உணவு செரிக்க உதவும். இதில் வைட்டமின் ‘பி’ காம்ப்ளக்ஸ் உள்ளது. நம்ம கிராமத்து விவசாயி களின் ஆரோக்கிய ரகசியமே பழைய சோறு தான்’ என்று ஆச்சரிய தகவல் தருகிறார் உடுமலை இயற்கை மருத்துவர் டாக்டர். நிவேதா பாலசுப்பிரமணியம்.
‘சுவை மிகுந்த பழைய சோறு எப்படி தயாரிப்பது’ என்ற வினாவுக்கு விடை தந்தார் கோவை வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர்: ‘புதிய ரக அரிசி, உரங்களால் சோறு கெட்டுப்போவதில்லை. உணவு சமைக்கும் முறை மாறி விட்டதே காரணம். முன்பெல்லாம் பானையில் சாதம் பொங்கி, கஞ்சியை வடித்துவிடும் போது அரிசியில் உள்ள ஸ்டார்ச் வெளியேறிவிடும். இதனால் உணவு கெட்டுப்போகாது. ஆனால், இப்போது குக்கர் சமையலில்  கஞ்சி வடிக்கப்படாமல் இருப்பதால் சாதத்தில் ஸ்டார்ச் இருக்கிறது. இதனால் ஒரே நாளில் உணவு கெட்டுப்போகிறது. குக்கர் இல்லாமல் வேறு பாத்திரத்தில் சமைத்தால் சுவையான பழைய சோறு கிடைக்கும்.
வார இறுதியில், பீட்சாவுக்காக ரூ. 500 செலவு செய்யும் நம்ம குழந்தைகளுக்கு பழைய சோறு பழக்கப்படுத்துவோம். நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்
- சேது

3 comments:

  1. அருமையான செய்தி. இன்றைக்கு மிகவும் அவசியமான செய்தியும் கூட....வாழ்த்துகள்

    ReplyDelete
  2. சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..!

    "ஆற்றுநீர் வாதம் போக்கும்
    அருவிநீர் பித்தம் போக்கும்
    சோற்றுநீர் இரண்டையும் போக்கும்"

    கிராம மக்களின் தினசரி உணவாகவும், காலைநேர பானமாகவும் தொன்று தொட்டு காலை பழக்கத்தில் இன்றுவரை தொடரும் அன்றாட ஆரோக்கிய பானம் நீராகாரம். முதல்நாள் இரவில் 2 பிடி சோற்றினை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 குவளை சுத்தமான தண்­ணீர் விட்டு மூடி வைக்க வேண்டும். காலையில் எழுந்ததும் அதில் தேவையான அளவு கல்லுப்பு சேர்த்து சிறிய வெங்காயம் 3 நறுக்கிப் போட்டுக் கரைத்து அப்போதே சாப்பிட வேண்டும். உச்சிப் பொழுதில் பச்சைநிற வயல் வெளியில் புங்கமர நிழலில் இதே நீராகாரத்தை மாங்காய் ஊறுகாயுடன் அல்லது பூண்டு + வெங்காயம் சேர்ந்த வத்தக்குழம்புடன் தொட்டுத் தொட்டு சுவைத்துப் பருகினால் ஆஹா...! எழுதும்போதே நாவில் உமிழ்நீர் அருவியாக சுரக்கின்றதே....

    இப்படி கோடைக்காலம் முழுதும் தினசரி ஒரு வேளையாவது சோற்றுநீரை (நீராகாரத்தை) 2 குவளை பருகினால் என்ன நிகழும்? ஒரு பழமொழி பதில் சொல்கிறது.

    ஆற்றுநீர் வாதம் போக்கும்

    அருவிநீர் பித்தம் போக்கும்

    சோற்றுநீர் இரண்டையும் போக்கும்

    ஆமாங்க! ஆறும், அருவியும் இல்லாத ஊரில் உள்ள மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்ததுதான் சோற்றுநீர். இதனால் வாத நோய்களான பக்கவாதம் கைகால் அசதி, முடக்குவாதம் மற்றும் பித்த நோய்களான வயிற்றுப்புண், இரத்த மூலம், சரும நோய்கள் வராது தடுக்கும். அத்துடன் கோடைக்கால பாதிப்புகளான வயிற்றுவலி, சருமத்தில் தோன்றும் வேனல் கட்டி, வேர்க்குரு, தேக அனல் ஆகியன வராது காக்கும். சோற்றுநீர் அருமையை உணர்ந்த மேல்நாட்டு விஞ்ஞானி ஒருவர் அதனை சோதனைச் சாலையில் ஆராய்ந்து பிஎச்.டி. பட்டம் பெற்றுள்ளார் என்பது சோற்றுநீரின் அருமைக்குக் கிடைத்த அண்மைக்கால பெருமை!

    நன்றி: இனியவன்

    ReplyDelete

Comment as என்ற இடத்தில் Anonymous என்பதைத் தெரிவு செய்து கொள்ளலாம் அல்லது gmail அக்கவுண்ட் இருந்தால் google என்ற விவரத்தைத் தெரிவு செய்து கொண்டு, உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.