Thursday, May 3, 2012

தெய்வமே! எனக்கு இரண்டு சிறகுகள் தர மாட்டாயா?



தெய்வமே! எனக்கு இரண்டு சிறகுகள் தர மாட்டாயா?

‘தெய்வமே! எனக்கு இரண்டு சிறகுகள் தர மாட்டாயா?. பாழ்பட்ட மனிதர் கூட்டத்தையும், அதன் கட்டுகளையும், நோய்களையும், துன்பங்களையும், பொய்களையும் உதறி எறிந்துவிட்டு, நான் இஷ்டப்படி வானத்திலே பறந்து செல்ல மாட்டேனா? ஆகா! எத்தனை தேசங்கள் பார்க்கலாம்! எத்தனை பூக்கள், எத்தனை மலைகள், எத்தனை அருவிகள், எத்தனை நதிகள், எத்தனை கடல்வெளிகள்!...’
- மகாகவி பாரதியின் மனதில் பொதிந்திருந்த ஆசைகள் இவை.
சுதந்திரமாய், வீட்டுக்குள் பறந்து வரும் சிட்டுகுருவிகளுக்கு அரிசி மணிகள் வழங்கி, அவை கொத்தி தின்னும் அழகை ரசிப்பதுதான் பாரதியின் முக்கிய பொழுதுபோக்கு.
சிறு நகரங்களில்கூட குருவிகள் பறப்பதை நாம் ரசித்திருப்போம்.  வீடுகளின் கூரைகளிலும், வீட்டின் முற்றத்திலும் சிதறிக்கிடக்கும் தானியங்களை அவை உண்ணும் அழகை கண்டு களித்திருப்போம். ‘கீச்’, ‘கீச்’ என செல்லமாய் குரலெழுப்பி, ‘துறு, துறு’வென இரை தேடும் சிட்டுகுருவிகளின் தரிசனம் பார்த்து நகரங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது.
வசீகர அழகு காட்டும் சிட்டுக்குருவிகள் எங்கே போயின? என்ற ஆராய்ச்சியில் பறவையின ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வெளியிடும் கருத்து:
* சிட்டுக்குருவிகள் ஆண்டு முழுவதும் இனப்பெருக்கம் செய்யும் இயல்புடையவை. இதனால் அவற்றுக்கு ‘ஆண்மை விருத்தி  சக்தி’ உண்டு என்று சில ‘வைத்தியர்கள்’ கருத, ‘சிட்டுக்குருவி லேகிய’த்துக்காக உயிர்த் தியாகம் செய்துள்ள குருவிகள் ஏராளம்.
* விசாலமான முற்றத்துடன் ஓடுகள், கம்புகள் வேய்ந்து கட்டப்பட்ட நமது பாரம்பரிய வீடுகள் சிட்டுக்குருவிகள் கூடு கட்ட உகந்ததாக இருந்தன. அபார்ட்மென்ட்டுகளாக நமது வீடுகளின் அமைப்புகள் மாறிவிட்டதால் குருவிகள் சிறகடிக்க வசதியில்லை.
* அலைபேசி கோபுரங்கள் விடும் கதிர்வீச்சு குருவி போன்ற மெல்லிய பறவையினங்களை பாதிக்கின்றன.
* தானியங்களில் தெளிக்கப்படும் பூச்சி கொல்லிகள்கூட குருவிகள் அழிவுக்கு காரணமாகின்றன என பட்டியலிடுகிறார்கள். முற்றங்கள் தொலைந்து பால்கனிகளாக மாறிப்போன நமது அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சிட்டுக்குருவிகளை அழைத்துவரப்போவது யாரோ?.
பாரதி இப்படிச் சொல்கிறார்: என் வீட்டிலே இரண்டு உயிர்கள் வாழ்கின்றன. அவற்றில் ஒன்று ஆண். மற்றொன்று பெண். இவை தம்முள்ளே பேசிக் கொள்கின்றன. குடும்பத்துக்கு வேண்டிய உணவு தேடிக் கொள்கின்றன. கூடு கட்டிக்கொண்டு, கொஞ்சிக் குலாவி மிக இன்பத்துடன் வாழ்ந்து, முட்டையிட்டுக் குஞ்சுகளைப் பசியில்லாமல் காப்பாற்றுகின்றன.
சிறிய தானியம் போன்ற மூக்கு; சின்னக் கண்கள்; சின்னத் தலை; வெள்ளைக் கழுத்து; அழகிய  வெண்மை நிறமுடைய பட்டுப் போர்த்த வயிறு; சாம்பல் நிற முதுகு; சிறிய தோகை; துளித்துளிக் கால்கள். இத்தனையும் சேர்த்து ஒரு பச்சைக் குழந்தையின் கைப்பிடியிலே பிடித்து விடலாம். சிட்டுக்குருவி பறப்பதைப் பார்த்து எனக்கு பொறாமை உண்டாகும். இந்தக் குருவிக்கு எப்போதேனும் தலை வலி வருவதுண்டோ? மனிதரின் நெஞ்சைச் செல்லரிப்பதுபோலே அரிக்கும் கவலையும், அதனால் ஏற்படும் நோயும் குருவிக்கு இருப்பதாகத் தெரியவில்லை.
இப்போது சொல்லுங்கள், நாம் எவ்வளவு ‘மிஸ்’ பண்ணியிருக்கோம்?.
- சேது

3 comments:

  1. veery nice......

    ReplyDelete
  2. அன்பு சேது சார்,
    நம்ப லலிதாம்பிகை அம்மன் கோவில்ல 100 சிட்டுக்குருவிகள் இருக்குங்க. அதிகாலைப்பொழுதுகளில் அவை செய்யும் கீச்ச்குக்குரல் சங்கீதம் வாழ் நாள் துயரமெல்லாம் பறந்தே போயிடும்... ஆனா அதை எங்களோடு சேர்ந்து அனுபிவிக்கதான் யாராவது வேண்டும்...வாங்க வாங்க..சுவாமி
    www.srilalithambika.org

    ReplyDelete
  3. இயற்கையை நாம் அழித்தால்.... இயற்கை நம்மை அழித்துவிடும்!!!

    ReplyDelete

Comment as என்ற இடத்தில் Anonymous என்பதைத் தெரிவு செய்து கொள்ளலாம் அல்லது gmail அக்கவுண்ட் இருந்தால் google என்ற விவரத்தைத் தெரிவு செய்து கொண்டு, உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.