Tuesday, May 22, 2012

நவக்கிரக சன்னிதி உணர்த்தும் அறிவியல் உண்மைகள்



‘உங்களுக்கு நெஞ்சு வலி ஏற்படும். மெடிக்கல் இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்வது நல்லது...’
‘தொழிலில் நஷ்டம் ஏற்படும். கூட்டாளிகளை நம்ப வேண்டாம்...’
‘வாகனங்களில் செல்லும் போது காயம் ஏற்பட வாய்ப்பு உண்டு...’
- இவையெல்லாம் சமீபத்தில் ஒரு ஊடகத்தில் வெளியான ராசிபலன்.
இதேபோல, ‘சந்திராஷ்டமம்’ என காலண்டரில் குறிப்பிடும் தினங்களில் கோபம், டென்ஷன் ஏற்படும். வீண் விவாதங்களை தவிருங்கள் என்று குறிப்பிடுவார்கள்.
கிரக மாற்றங்கள் நிகழும்போது குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு ‘நெஞ்சு வலி ஏற்படும்’ என்ற ரீதியில் பலன் சொல்வது சரிதானா?. சந்திராஷ்டம பயம் தேவையா?. ஜோதிடம் அறிவியல் ரீதியிலானதா? இப்படி பல கேள்விகள் பலரிடமும்.
‘சூரியனை மையமாகக் கொண்டு பூமி உட்பட எல்லா கிரகங்களும் சுற்றிவருகின்றன என்ற வானியல் உண்மையை நமது முன்னோர் திறம்பட அறிந்து இருந்தார்கள் என்பதற்கு நமது ஆலயங்களில் காணப்படும் நவக்கிரக பிரதிஷ்டையில் சூரியன் நடு நாயகமாக அமைக்கப்பட்டுள்ளதே நிரூபணமாகும். அதுமட்டுமின்றி திருக்கணித பஞ்சாங்கங்களில் குறிப்பிடப்படும் நேரத்தில்தான் அறிவியல் ரீதியாக வரும் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஆகியவை நிகழ்கின்றன. எனவே, ஜோதிடம் என்பது முழுவதும் அறிவியல் அடிப்படையிலானதே’ என்கிறார் வேத ஜோதிடத்தில் நீண்ட அனுபவம் கொண்ட கோவை ஸ்ரீ ஜெகநாத சுவாமி.
காலண்டர்களில் ‘சந்திராஷ்டமம்’ என குறிப்பிடப்படுவது ஒருவரின் பிறந்த ராசிக்கு சந்திரன் கோள்சாரத்தில் எட்டாவது ராசிக்கு வரும் இரண்டேகால் நாட்களாகும். அந்த நாட்களில் உளவியல் அடிப்படையில் ஒருவரின் மன ஆற்றல்கள் குறைந்து காணப்படும். அதேபோல, அமாவாசை, பவுர்ணமி நாட்களிலும் உடல் மற்றும் மன பாதிப்பு உடையவர்கள் நிலையில் மாற்றம் காணப்படும். கடல் அலைகளில் மாற்றம் ஏற்படுவதும் கண்கூடு.
ஊடகங்களில் வரும் ராசி பலன்கள் 12 ராசிக்காரர்களுக்கும் ஏற்படும் மிகப்பொதுவான பலன்களே. ஆனால், அவரவர் பிறந்த ஜாதகப்படி நடக்கும் தசாபுத்திகளின் அடிப்படையிலும், வயது அடிப்படையிலும் இந்தப் பலன்கள் மாறுபடலாம்.
உதாரணமாக, ‘ஏழரைச்சனி’ என்பது தனது முதல் சுற்றில் ஒருவிதமான பலனையும். இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்றில் வேறுவிதமான பலன்களையும் தரக்கூடும். குறிப்பிட்ட ஒரே ராசியில் உள்ள எல்லாருக்கும் ‘நெஞ்சுவலி ஏற்படும்’. ‘விபத்து உண்டாகும்’ என்பதெல்லாம் நிச்சயமாக நடக்காது’ என்று தெம்பு தந்தார் ஜெகநாதசுவாமி.
‘மேலை நாடுகளில் ஒருவரின் மன நிலை அனுபவம் மற்றும் குணாதிசய அடிப்படையிலேயே ராசிபலன்கள் எழுதப்படுகின்றன.  ஆனால், நம்ம ஊர் ராசி பலன்கள் வாழ்வில் ஏற்படும் நிகழ்ச்சிகளை நேரடியாகக் குறிப்பிடுகின்றன. அவரவர் ஜென்ம ஜாதகத்தை பார்த்து மட்டுமே இதை சரியாக சொல்ல முடியும். தற்கால சமூக, அறிவியல் வளர்ச்சிகளுக்குத் தகுந்தாற்போல ஜோதிடத்துறையை மேலும் நவீனப்படுத்துவது அவசியமாக உள்ளது’ என்கிறார்கள் ஜோதிட வல்லுனர்கள்.
டென்ஷன், படபடப்பு, கோபம் கொப்பளிக்கும் சந்திராஷ்டம தினத்தின் அறிவியல் உண்மையை அறிந்து கொண்டால், நாம் அன்றைய தினத்தில் வாயை திறக்காமல், ‘மவுன விரதம்’ இருப்பதே மேல் என்ற முடிவுக்கு வந்துவிடுவோம்.
- அன்புடன் சேது

1 comment:

  1. சார் வணக்கம்....


    உங்கள் பிளாக்கில் பாலோயர்ஸ் ஆப்சன் இணைத்துவிட்டால் நீங்கள் மெயில் அனுப்ப வேண்டியிருக்காது. உங்கள் பிளாக்கை பாலோ செய்யவும் வசதியாக இருக்கும்....

    ReplyDelete

Comment as என்ற இடத்தில் Anonymous என்பதைத் தெரிவு செய்து கொள்ளலாம் அல்லது gmail அக்கவுண்ட் இருந்தால் google என்ற விவரத்தைத் தெரிவு செய்து கொண்டு, உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.