கேள்விகளும், ஆச்சர்யங்களும்!
செல்வம் குவிய வேண்டும்... வசதிகள் பெருக வேண்டும்... நோய்கள் நெருங்கக்கூடாது... என ஆலயங்களில் ‘பிரார்த்தனை’கள் ஒருபுறம் பெருகி வருகிறது.
மறுபுறம், அன்பான குடும்பம்... அமைதியான வாழ்க்கை... ஆதரவற்றோருக்கு உதவி... என்று சேவையில் ஈடுபட்டு மனித பிறவியை மகத்தானதாக்கிக்கொள்ளும் மனிதர்கள் இருக்கிறார்கள்.
அந்தவகையில், ஷீரடி சாயி பக்தர்கள் தனி ரகம்.
கண்களில் கனிவு, எளியோருக்கு உதவும் குணம். நாள் தவறாமல் பிறருக்காக பிரார்த்தனை என்பது மட்டுமல்லாமல், ஒவ்வொரு சாயி பக்தர்களும் ஏதாவது ஒரு அற்புதம் உணர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
5 ஆண்டுகளுக்கு முன் ஷீரடியில் இருந்து பாபா காலண்டர் ஒன்று என் இல்லம் வந்தபோது, முகத்தில் சாந்தம் தவழ அதில் இருந்த பாபா பற்றி நான் எதுவும் அறிந்திருக்கவில்லை.
ஒருசமயம், அடையாறில் உள்ள ஆனந்தி சீனிவாசன் வீட்டுக்கு சென்றிருந்தபோது, அவரது பூஜையறையில் பாபா விக்ரகம்.
‘இனிப்பு தொழிலுக்கு இடம் தேடி அலைந்து சோர்ந்திருந்தபோது, பெரிய தொழிற்சாலை அமைக்க பாபாவே இடம் அடையாளம் காட்டினார்’ என ஆச்சரியம் குறையாமல் பாபா அற்புதங்கள் பேசினார்.
ஒருமுறை, கிண்டியில் பாபா கோயிலில் நடந்த ஹோமத்தில் எழுந்த நெருப்பு ஜ்வாலையில் பாபாவின் உருவம் தோன்றியதாக பக்தர்களிடையே பரபரப்பு. மறுநாள் ஆங்கில பத்திரிகையில் வெளியான படத்தில் பாபாவின் உருவ அமைப்பை பார்த்து பலரும் பரவசம் அடைந்தனர்.
மேற்கு மாம்பலத்தில் இருக்கும் பாபா கோயிலில் வேறு அனுபவம்.
‘பாபா சிரித்தார்’ என்று ஒரு படம் வெளியானது. தோற்றம் வேறுபட்டு, அந்த படத்தில் இருந்த பாபாவின் முகத்தில் புன்னகை ததும்பியது.
கொடைக்கானலில் கைவினை ஷோரூம் நடத்தி வருகிறார் ஒரு பாபா பக்தர். தன் முகம் காட்ட மாட்டார். முகவரி தரமாட்டார். எந்த விளம்பரமும் கிடையாது. நீங்கள் பாபா பக்தர் என்று தெரிந்தால்போதும், உங்கள் முகவரி வாங்கிக்கொண்டு, பூஜை அறையில் வைத்து பூஜிக்கத்தகுந்த 3 இன்ச் அளவுள்ள பாபா வெண்கல விக்ரகம் இலவசமாக வீட்டுக்கு அனுப்பி வைப்பார்.
அவர் ஆங்கில பேராசிரியை ஞானவதி. அவரது பெண், 10ம் வகுப்பில் அதிக மார்க் வாங்கியதற்காக பாபாவுக்கு நன்றி சொல்ல கோயில் செல்கிறார். அவரிடம், ‘அம்மா, பாபா விக்ரகம் பிரதிஷ்டை செய்வதற்கு பாபாவின் நாமங்கள் நூறு முறை எழுதி தாருங்கள்’ என்று அர்ச்சகர்கள் சொல்கிறார்கள்.
‘பாபா, உன் நாமம் எழுதப்போகிறேன். எனக்கு என்ன பரிசு தருவாய்?’ என கேட்டபடி வீடு வந்து சேரும் ஞானவதிக்கு அவரது சகோதரரிடம் இருந்து விலை உயர்ந்த பேனா பரிசாக வருகிறது.
பாபா பக்தர்களிடம் இப்படி பல சம்பவங்கள். பாபாவுடன் பேசிக் கொண்டிருப்பவர்கள்கூட உண்டு. கேட்க, கேட்க ஆச்சரியம் ததும்பும்.
தி.நகர் சரோஜினி தெருவில் பாபா தியான மையம் நடத்தி வரும் வள்ளுவன், நாளிதழ்களில் யாருக்காவது உதவி தேவை என்று விளம்பரம் வந்தால் போதும், நிதி திரட்டி அனுப்பி வைப்பார்.
மயிலாப்பூர் பாபா கோயில் விக்ரகத்தின் முகம் வருடி, பாதங்களில் முகம் புதைத்து மனம் பறிகொடுக்கும் பக்தர்கள் ஏராளம். பாபாவை பங்குதாரராக போட்டு தொழில் ஆரம்பித்து அதில் பாபாவுக்கு வரும் லாபத்தில் கோயில்களுக்கும் ஏழைகளுக்கும் செலவிடுகிறவர்களும் உண்டு.
பாபாவின் ஆலயங்களில் மின்னும் வாசகங்கள் ‘பொறுமை’, ‘நம்பிக்கை’ . இந்த இரண்டையும் பின்பற்றினாலே வாழ்வில் எல்லா நலமும், வளமும் வந்து சேரும்.
- அன்புடன் சேது
இந்த எழுத்துக்கள் புத்தக வடிவில் விரைவில் வரவேண்டும் என்பது என் ஆவல்....
ReplyDeleteரா.வேலுச்சாமி, கோவை