Monday, June 27, 2016

பறவைகளோடு என் காதல்!

பழகி, பாசத்தால் பிணைந்த மனிதர்களைப் பிரிவது போலதான் இருக்கிறது வாழ்ந்து மகிழ்ந்த வீட்டையும், பிறந்து சுற்றித் திரிந்த ஊரையும் பிரிவது.
புது வீடு மாறி 2 வாரங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் சுவர்களுக்குள் ஒட்டவில்லை வாழ்க்கை. வீட்டை தொட்டுச் செல்லும் ரயில்கள் இன்னமும் மனசுக்குள் மகிழ்ச்சி தருகின்றன. அதே மேற்கு மாம்பலம்தான் என்றாலும், அருகில் வேறுவேறு முகங்கள், குணங்கள்.
புது இடங்களை பழகுவதைவிட, புது முகங்களை புரிந்து கொள்வதும், அவர்களோடு பழகுவதும் கடினமாக இருக்கிறது. அதனால்தான் ‘காக்கை, குருவி என் ஜாதி’ என பெரும்பாலும் நீல வானோடும், பசுமையோடும் காதல் கொள்கிறேன்.
பணிச்சூழல் காரணமாகவும், பணத் தேவைகளுக்காகவும் பிறந்த ஊரை விட்டு வேறு நகரம், வேறு நாடு செல்பவர்களுக்கு மிகவும் மனத்துணிவு வேண்டும்.
அப்படித்தான் பிறந்த மதுரையை பிரிந்து நான் சென்னை வந்ததும் இதயம் தொலைத்து இயங்கிக் கொண்டிருந்தேன். இன்னமும்கூட நீண்ட நாள் மதுரையில் இருந்து மனதை பிரிக்க இயலவில்லை.
ரயில் பயணங்களில் மதுரை நோக்கி செல்லும் நாட்கள் மனசுக்குள் குளிரடிக்கும். வைகை நதி பாலத்தை ரயில் கடக்கும்போது மீனாட்சி கோபுரம் தெரிய தொடங்கியதும் மதுரை நினைவுகள் மனசுக்குள் தட,தடவென வேகம் பிடிக்கும். நாயக்கர் புதுத்தெரு, மேலமாசிவீதி வாழ்க்கையின் ஞாபகங்கள் அலைமோதும்.
இப்போதும்கூட, கோரிப்பாளையம் விசாலம் காபியின் சுவை சென்னையில் எங்காவது தட்டுப்படாதா என கால்கள் அலைந்து திரியும்.   
மதுரையில் இருந்து கிளம்பி 1993ன் தொடக்கத்தில் கோயமுத்துார் சென்றபோது புள்ளி வைத்தது போன்ற சிறு பிரிவு மனதில் இருந்தது. கோயமுத்துார் மக்களின் ஈரம் கசிந்த இனிய நட்பும், இனிப்பான சிறுவாணி நீரும், ஜிலு,ஜிலு பாலக்காடு கணவாய் காற்றும் அந்த பிரிவு துயரை துடைத்தது. மிக,மிக குறுகிய என் நட்பு வட்டத்துக்குள் மிகுதியாய் இருப்பது கோயமுத்துார் அன்பர்களே!
ஆசை,ஆசையாய் ருசிபார்க்கும் ஒரு குழந்தையின் கையில் இருக்கும் மிட்டாயை, படீர் என பிடுங்கியதும் அது முகத்தில் தெரியும் குபீர் அதிர்ச்சிபோல இருக்கிறது பழகிய இடத்தையும், வீட்டையும் விட்டுப்போவது.
அவர்களுக்கு அது வெறும் கட்டடம். வேறு மனிதர்கள் வருவார்கள், போவார்கள், தங்குவார்கள்.
மனதால் வாழ்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் அது சுவாசம் என்று!
புது வீடு அருகே நிறைய காகங்கள், கொஞ்சம் குயில்கள், வாசலில் எப்போதும் 2 பசுக்கள், அதன் கன்றுகள். ரயில் பாதையை ஒட்டி இருப்பதால் எப்போதும் விசாலமான வெளிப்புறம், குபீர் என கதவை தள்ளிக்கொண்டு வரும் காற்று. பேச்சுத் துணைக்கு இருப்பதுபோல எப்போதும் ரயில்களின் ஓசை. அருகில்  இருக்கும் 7 குடும்பங்களைவிட இவைகளுடன் அதிகம் ஒட்டிக்கொண்டிருக்கிறோம்.    

Friday, June 24, 2016

மனம் ஒரு சிறகானது

இன்று காலையில் மனதின் சிறகுகள் மீது பெரும் பாறாங்கற்கள் வைத்தது போன்ற அழுத்தம், வலி.
நெஞ்சம் கலங்கி நின்ற வேளையில், முதலில் கோவை முனைவர் ஸ்ரீ ஜெகநாத சுவாமியிடம் இருந்து அலைபேசி அழைப்பு.
அபிராமி அந்தாதி தொடரின் நிறைவு பகுதி குறித்து நிறைய பேசினார். அதில் பொதிந்திருந்த ஸ்ரீவித்யா மார்க்கம் குறித்த ஆய்வு விளக்கினார்.
கன்றுகளின் பசியாற, பசுவின் மடியில் இருந்து சுதந்திரமாக விடுபடும் பால் அடுப்பிலிடப்படும்போது அலறி துடிக்கும். அதன்பின் தயிர், வெண்ணை, நெய்யாக பாடாய்படுத்தப்பட்டு இறுதியில் ஹோமத்தில்
நெய் உருவில் கரையும்போது தேவியின் திருவடிகளை சரணடையும் பேரானந்தம் நிகழ்கிறது என்று சுவாமிகள் எழுதிய வரிகளை விவரித்தேன்.
இதுபோல்தான் மனிதனும் கஷ்டங்களின் இறுதியில் இறைவனுக்கு இஷ்டமுடையவனாகிறான் என்பதை இன்றைய பகல் எனக்கு நினைவுபடுத்தியது.
அடுத்த அழைப்பு எழுத்தாளர் திருமிகு ராஜேஷ்குமாரிடம் இருந்து. அப்பா எப்படி இருக்காங்க? உங்கள் பதிவு மனதை உருக்கியது என்றவர் தொடர்ந்து மனம்விட்டு பேசினார்.அலைபேசியில் அப்பாவிடமே அவரை பேச வைத்தேன்.
நேரிலும், எழுத்திலும், பேச்சிலும் பளிச்சிடும் அவரது இளமையின் ரகசியத்தையும் முதன்முறையாக சொன்னார்.
இருபெரும் மனிதநேய மாமனிதர்களின் பேச்சால் இன்றைய பொழுது இனிதானது. மனம் ஒரு சிறகானது.

Saturday, June 4, 2016

நன்றி இறைவா... நன்றி ராஜா...

அம்மா - அப்பாவை எங்காவது அமைதியான, இனிமையான சூழலுக்கு அழைத்து சென்று வர வேண்டும் நண்பர்களிடம் சில வாரங்களாக சொல்லி கொண்டிருந்தேன்.
ஏதோ மனசுக்கு தோன்றியது...
வயதின் காரணமாக அவர்களுக்கு வீட்டை விட்டு, ஏன் அறையை விட்டு கூட வெளியே வர பயம்.
வீட்டுகுள்ளேயே இருக்கிறார்களே என்று எனக்கு வருத்தம்.
கடற்கரையிலேயோ, பூங்காவிலேயோ, கோவிலிலேயோ கொஞ்சம் காலார, மனதார நடந்து சந்தோஷபடட்டுமே என நினைத்துகொண்டிருந்த வேளையில், 2 வாரத்துக்கு முன், அவரது அறையிலேயே சட்டெனெ தடுமாறி கீழே விழுந்துவிட்டார் அப்பா.
தலையில் அடிபட்டதில் மூளையில் ரத்த கட்டு. 2 நாள் ஆஸ்பத்திரி observation க்கு பிறகு வீடு திரும்பி ஓய்வு எடுக்கிறார்.
இன்னும் ஒருவாரம் கழித்து 3 வதாக எடுக்கப்பட இருக்கும் CT Brain Scan தான் surgery தேவையா, இல்லையா என்பதை சொல்லும் என்பதால் 2 வாரங்களாக பதை,பதைப்புடன் கழிகிறது வாழ்க்கை.
86 வயசில இப்படி சிரமபடுறது மனசுக்கு கஷ்டமா இருக்கு... என்றபடி அவர் சுவாமி படங்களையும், எங்களையும் பார்த்து கும்பிடுவதை பார்த்தால் மனம் வலிக்கிறது.
அவரிடமே சொன்னேன், மனிதனை மனிதன் வணக்க கூடாது. இறைவனை மட்டும் வணங்குங்கள். அவர் நல்லதே செய்வார் ...
மகனுக்கு தொல்லை தருகிறோமே என்ற வருத்தம் அவருக்கும், வயதானவர்களுக்கான வாழ்க்கை சூழலை ஏற்படுத்தி தர முடியவில்லையே என்ற வலி எனக்குமாக தொடர்கிறது.
வெறும் உணவிடுவதும், உடை தருவதும், ஒன்றாக வாழ்வது மட்டும்தான் கவனிப்பா?
அப்பாவை ஆஸ்பத்திரி அழைத்து போன போது தான் கவனித்தேன்...
60 வயது கடந்தவர்களில் பலர், நிரிழிவு, டயாலசிஸ், ஸ்ட்ரோக், மூட்டு தேய்மானம் என வித, விதமான வியாதிகளுடன் வாழ்கிறார்கள்...
அவர்களிடம் ஆயுள் மட்டும்தான் இருக்கிறது வாழ்வில் ஆனந்தம் இல்லை...
வயது மட்டும்தான் அதிகரித்திருகிறது வசந்தம் இல்லை...
பணம் வைத்திருப்பவர்களுக்கு சிகிச்சையாவது கிடைத்து விடுகிறது. அதுவும் இல்லாதவர்கள் நோயுடனும், வலியுடனும் வாழ பழகி கொள்கிறார்கள்.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் நரம்பியல் மருத்துவ நிபுணர் திரு. லக்ஷ்மி நரசிம்மன் அன்பு கிடைத்தது பெரும் தவம்.
எந்த எதிர்பார்ப்பும் இன்றி அப்பாவை அன்பாக கவனித்து கொள்கிறார்...
மதுரை டாக்டர் கனியரசு ஒவ்வொரு இரவிலும் அப்பாவின் உடல் நலம் வாட்ஸ்அப்பில் விசாரித்து நம்பிக்கையூட்டுகிறார்...
ஆசையற்று இருப்பவன்கூட வாழ்வின் இறுதிநாட்கள் வலியின்றி கழியவேண்டும் என்று பேராசை வைத்திருப்பான்...
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் குழந்தைகள் நரம்பியல் அறுவை சிகிச்சை வார்டில், அறுவை சிகிச்சை அடையாளங்களுடன் படுத்து இருக்கும் ஏதும் அறியா மழலைகள் முகத்தில் ஒரு மின்னல் புன்னகை பார்த்து அதிசயித்தேன்.
வாழ்கையை இப்படிதான் எதிர்நோக்கவேண்டும் என்ற சூத்திரம் புரிந்தது.
ராஜாவின் இசையால் மனதை நிரப்பி தூங்க சென்ற இரவுகள் பலநாட்களாக தொலைந்து போய் இன்றைக்கு திரும்ப கிடைத்து இருக்கிறது.
குழந்தைகளிடம் இருந்து ஒரு உண்மையும், ராஜாவின் இசையில் இருந்து கொஞ்சம் இனிமையும் கிடைத்தது...
நன்றி இறைவா... நன்றி ராஜா...