Saturday, June 4, 2016

நன்றி இறைவா... நன்றி ராஜா...

அம்மா - அப்பாவை எங்காவது அமைதியான, இனிமையான சூழலுக்கு அழைத்து சென்று வர வேண்டும் நண்பர்களிடம் சில வாரங்களாக சொல்லி கொண்டிருந்தேன்.
ஏதோ மனசுக்கு தோன்றியது...
வயதின் காரணமாக அவர்களுக்கு வீட்டை விட்டு, ஏன் அறையை விட்டு கூட வெளியே வர பயம்.
வீட்டுகுள்ளேயே இருக்கிறார்களே என்று எனக்கு வருத்தம்.
கடற்கரையிலேயோ, பூங்காவிலேயோ, கோவிலிலேயோ கொஞ்சம் காலார, மனதார நடந்து சந்தோஷபடட்டுமே என நினைத்துகொண்டிருந்த வேளையில், 2 வாரத்துக்கு முன், அவரது அறையிலேயே சட்டெனெ தடுமாறி கீழே விழுந்துவிட்டார் அப்பா.
தலையில் அடிபட்டதில் மூளையில் ரத்த கட்டு. 2 நாள் ஆஸ்பத்திரி observation க்கு பிறகு வீடு திரும்பி ஓய்வு எடுக்கிறார்.
இன்னும் ஒருவாரம் கழித்து 3 வதாக எடுக்கப்பட இருக்கும் CT Brain Scan தான் surgery தேவையா, இல்லையா என்பதை சொல்லும் என்பதால் 2 வாரங்களாக பதை,பதைப்புடன் கழிகிறது வாழ்க்கை.
86 வயசில இப்படி சிரமபடுறது மனசுக்கு கஷ்டமா இருக்கு... என்றபடி அவர் சுவாமி படங்களையும், எங்களையும் பார்த்து கும்பிடுவதை பார்த்தால் மனம் வலிக்கிறது.
அவரிடமே சொன்னேன், மனிதனை மனிதன் வணக்க கூடாது. இறைவனை மட்டும் வணங்குங்கள். அவர் நல்லதே செய்வார் ...
மகனுக்கு தொல்லை தருகிறோமே என்ற வருத்தம் அவருக்கும், வயதானவர்களுக்கான வாழ்க்கை சூழலை ஏற்படுத்தி தர முடியவில்லையே என்ற வலி எனக்குமாக தொடர்கிறது.
வெறும் உணவிடுவதும், உடை தருவதும், ஒன்றாக வாழ்வது மட்டும்தான் கவனிப்பா?
அப்பாவை ஆஸ்பத்திரி அழைத்து போன போது தான் கவனித்தேன்...
60 வயது கடந்தவர்களில் பலர், நிரிழிவு, டயாலசிஸ், ஸ்ட்ரோக், மூட்டு தேய்மானம் என வித, விதமான வியாதிகளுடன் வாழ்கிறார்கள்...
அவர்களிடம் ஆயுள் மட்டும்தான் இருக்கிறது வாழ்வில் ஆனந்தம் இல்லை...
வயது மட்டும்தான் அதிகரித்திருகிறது வசந்தம் இல்லை...
பணம் வைத்திருப்பவர்களுக்கு சிகிச்சையாவது கிடைத்து விடுகிறது. அதுவும் இல்லாதவர்கள் நோயுடனும், வலியுடனும் வாழ பழகி கொள்கிறார்கள்.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் நரம்பியல் மருத்துவ நிபுணர் திரு. லக்ஷ்மி நரசிம்மன் அன்பு கிடைத்தது பெரும் தவம்.
எந்த எதிர்பார்ப்பும் இன்றி அப்பாவை அன்பாக கவனித்து கொள்கிறார்...
மதுரை டாக்டர் கனியரசு ஒவ்வொரு இரவிலும் அப்பாவின் உடல் நலம் வாட்ஸ்அப்பில் விசாரித்து நம்பிக்கையூட்டுகிறார்...
ஆசையற்று இருப்பவன்கூட வாழ்வின் இறுதிநாட்கள் வலியின்றி கழியவேண்டும் என்று பேராசை வைத்திருப்பான்...
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் குழந்தைகள் நரம்பியல் அறுவை சிகிச்சை வார்டில், அறுவை சிகிச்சை அடையாளங்களுடன் படுத்து இருக்கும் ஏதும் அறியா மழலைகள் முகத்தில் ஒரு மின்னல் புன்னகை பார்த்து அதிசயித்தேன்.
வாழ்கையை இப்படிதான் எதிர்நோக்கவேண்டும் என்ற சூத்திரம் புரிந்தது.
ராஜாவின் இசையால் மனதை நிரப்பி தூங்க சென்ற இரவுகள் பலநாட்களாக தொலைந்து போய் இன்றைக்கு திரும்ப கிடைத்து இருக்கிறது.
குழந்தைகளிடம் இருந்து ஒரு உண்மையும், ராஜாவின் இசையில் இருந்து கொஞ்சம் இனிமையும் கிடைத்தது...
நன்றி இறைவா... நன்றி ராஜா...

No comments:

Post a Comment

Comment as என்ற இடத்தில் Anonymous என்பதைத் தெரிவு செய்து கொள்ளலாம் அல்லது gmail அக்கவுண்ட் இருந்தால் google என்ற விவரத்தைத் தெரிவு செய்து கொண்டு, உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.