Friday, May 20, 2011

அறிமுகம்!

விலாசங்கள்
விரைவில்...

மதிப்புக்குரியவர்களுக்கு...
என் இனிய வணக்கம் ...
பொதுவாக, நான் தனிமை விரும்புவேன். மிக மிக சுருங்கியது எனது நண்பர் வட்டம்.
என் உடன் பிறந்தவர்கள்...
என் உடன் வாழ்ந்தவர்கள் தாண்டி..

என் உடன் படித்தவர்கள்...
என் உடன் பணியாற்றியவர்கள்...
என் வாழ்கையில் உடன் பயணித்தவர்கள்...
என் உடன் குடி இருந்தவர்கள் ...
என சிறு எண்ணிக்கையில் தான் என் மனதில் இடம் பிடித்துள்ளார்கள்...

கடலை விட,  எனக்கு நதி பிடிக்கும் .
கடல் அளவுக்கு ஆக்ரோசம் இருக்காது நதிகளில்.
கால்களை  மெல்ல வருடி செல்லும் தாமிரபரணியை விட்டு வர மனம் வராது....

ஜன்னலோர பயணம்...
ஜன்னலுக்கு வெளியே முகம் மலர்ந்து, கை அசைக்கும் தளிர்கள்...
மேனி தழுவும் காற்று...
மனம் தவழும் இசை...
உதட்டில் பட்டு நாவில் நழுவி உள்ளே சூடு பரப்பும் காபி.. 


பட படக்கும் சிறகடிக்கும் சிட்டு குருவி
என் வாழ்க்கை சுவை கொள்வதற்கு இப்படி வெகுசில ரசனைகளே போதும் ...
என் அன்பு மகள் பிறந்த போது, அவள் பிஞ்சு கரங்களை பற்றி கொண்டு உறங்கிய அந்த நாட்கள்
இன்றும் மனசுக்கு மகிழ்ச்சி தருகிறது...
அவள் வயது, அவள் பருவம் இப்போது எங்களுக்குள் இடைவெளி அதிகபடுத்தி விட்டதுதான்  சோகம் .

என் கரங்களுக்குள் இப்போது என் மகன் உறங்கி கொண்டிருக்கிறான்...
என் மீது மதிப்பும் மரியாதையும் வைத்து, என் பெற்றோரின் சதாபிஷேக பரிசாக, காம்கேர் புவனேஸ்வரி அவர்கள் வடிவமைத்து எனக்கு வழங்கி இருக்கும் இந்த வலைப்பூ வழியே உங்களோடு பகிர்ந்து கொள்ள சிறிதளவு விஷயங்கள் உண்டு.
அதுவும் என் வாழ்கை பதிவுகளாக தான் இருக்கும்... அதில் நீங்கள் கூட இடம் பெறலாம் .

மதுரையில் ...
கோவையில் ...
சென்னையில்  ...
என மாறி மாறி பயணித்த என் வாழ்க்கையின் பதிவுகளில் சில நெகிழ வைக்கும் நிகழ்வுகளை தங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்..
ஒவ்வொரு பதிவுகளிலும் மறக்காமல் உங்கள் கருத்துக்களை சொல்லி செல்லுங்கள்... அது எனக்கு இன்னும் ஊக்கம் அளிக்கும்.

விரைவில் ... என் ப்ளாக் ஸ்போட் வழியே
விலாசங்கள் ல் உங்களை சந்திக்கிறேன்

 




நன்றி

அன்புடன்
சேது