Friday, August 14, 2015

அம்மாவின் பட்டியல் நீள்கிறது... 




‘எனக்கொரு ஆசைடா. இனிமே எப்ப பாக்கப்போறோமோ. மெட்ரோ ரயிலை கொண்டு போய் காட்றா...’ - 75 வயது கடந்த என் அம்மாவின் நினைவூட்டல். காலையில் இருந்து மணிக்கொருதரம் வந்த டிவி நேரலைகளை பார்க்கும்போதெல்லாம், திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தார்.
‘சரி போலாம்!. திங்கட்கிழமைக்கு மேல... ‘பீக்’ அவர் இல்லாத... கூட்ட நெரிசல் இல்லாத நேரமா பாத்து நான் அழைச்சுட்டு போறேன்...’ என்று சொல்லி முடிப்பதற்குள்...
‘இன்னிக்கு போனா, ஜெயலலிதா கொடி காட்டுறதையும் பாத்திரலாம்ல...’
இதுக்கு மேல ‘பிளான்’ பண்ணினா, சரியா வராதுன்னு, ‘கிளம்புங்க’னு உடனே புறப்பட்டோம். அம்மா, மனைவி, மகள் - 3 பெண்கள் பிளஸ் நான். பள்ளிக்குச் சென்ற என் மகனுக்கு தெரியாமல் நடந்தது ‘ரகசிய பிளான்’.
‘வீட்ட பாத்துக்கங்க’ அப்பாவிடம் சொல்லிவிட்டு புறப்பட்டோம்.
வீட்டு வாசலைக் கடந்தாலே, ‘பாத்ரூம் வர்றமாதிரி இருக்கு’ என பீதி கிளப்பும் என் 85 வயது அப்பா முகத்தில் சோகம்.
‘என்ன காவல் காக்க வைத்துவிட்டு போறீங்க. நான் எப்ப ரயில பார்க்க?’
அவரை தனியாத்தான் சமாளிக்கணும் என்ற முடிவுடன், ‘அடுத்த வாரம் நீங்க’ என்று ஆறுதல் சொல்லி கிளம்பினோம்.
ஆலந்துõர் மெட்ரோவில் கரை வேட்டிகள் கூட்டம்.
‘வண்டி கட்டி’ ஊர்களை கடந்து வளர்ந்த எனது அம்மாவுக்கு மெட்ரோ நவீனங்கள் புது பரவசம். பார்வை குறைபாட்டிலும், முதுகு வலியிலும், ஒரு மணி நேரமாக மெட்ரோ ஸ்டேசனை சுற்றி பார்த்தபடி இருந்தார். ரயில் பயணத்தின்போது இருக்கையில் அமராமல், பிரமாண்டமாய் பரந்து, விரிந்து கிடந்த சென்னை மாநகரை ஜன்னலுக்கு வெளியே ரசித்தபடி வந்தார்.
வயது, ஆக, ஆக வெளி உலகை பார்க்க வேண்டும் என்ற அதீத ஆவல் அம்மாவுக்கு!
பல நேரங்களில், நமக்கு ஏற்படும் ‘வாழ்க்கை அழுத்தங்களில்’ உடன் இருப்பவர்களின் விருப்பங்கள் நமது செவிகளைக்கடந்து மனதை தொடாமலே போய்விடுகிறது.
இன்று எனது காதுகள் அடைபட்டு, மனக்கதவுகள் திறந்திருந்த வேளையில் ஒலித்த, எனது அம்மாவின் குரல் என் சோம்பல் கலைத்தது. சோகம் விரட்டியது.
அம்மாவின் சின்னச் சின்ன ஆசைகளையாவது உடனே நிறைவேற்றுவோம் என அலுவலகத்துக்கு அரை நாள் லீவு சொல்லி, அம்மா கேட்டவுடன், முதல்நாள், முதல் பயணமாக மெட்ரோவில் பயணித்தோம்.
சட்டசபை, செயின்ட் ஜார்ஜ் கோட்டை, ரிப்பன் மாளிகை என அம்மாவின் பட்டியல் நீள்கிறது...
Even when failure
Squees and stops me - my smile never vanishes

I wont get frustrated
I wont get tensed

Rather, I wll try again
They are stepping stones of success
Never min who ever says.

I wll bring my sun shine
I wll bring my sun shine
I wll bring my sun shine

..................
என் மகள் எழுதிய கவிதை.
MindFresh -ன், Flying Elephants பயிற்சியில் ஒவ்வொரு குழந்தையும், தங்களுக்கு தாங்களே எழுதிக்கொள்ளும் தன்னம்பிக்கை கவிதை.
எனக்கு எழுதியது போலவே இருக்கிறது....
நன்றி :MindFresh



இன்னமும் அலை மோதுகிறது...
கலாம் மூச்சுக்காற்று!


கடந்த வாரம் அண்ணா பல்கலைக்கழகம் சென்றிருந்தேன். அங்கே மக்கள் ஜனாதிபதி
அப்துல் கலாம் அவர்கள் தங்கி இருந்த கெஸ்ட் ஹவுஸ் அறையை பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தது.
கலாம் வாழ்க்கை முறை பற்றி அவரது உதவியாளர் பாலசுப்ரமணியன் சொல்ல, சொல்ல, கலாம்
பயன்படுத்திய நாற்காலிகள், மேஜை, படுக்கை, தலையணை என எல்லாமும் என்னோடு
பேசிக் கொண்டிருந்தன.
குடியரசு தலைவர் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டதும் அவருக்கு வந்த கடிதங்கள்.
மாணவர்களிடம் பாடம் எடுக்க, அவர் கைப்பட எழுதிய அறிவியல் கருத்தரங்க குறிப்புகள்.
இசையில் கரைந்து அவர் உருகி, உருகி கேட்ட இசை குறுந்தகடுகள், மியூசிக் பிளேயர்.
அவரை தேடிவந்த அன்பு பரிசுகள்.
கோவை பிஎஸ்ஜி கல்லூரி மாணவர்கள் தொடங்கி மாணவச்
செல்வங்கள் அவரை வரைந்து அனுப்பி இருந்த ஓவியங்கள். அவர் தேடித்தேடி படித்த புத்தக
பொக்கிஷங்கள். அவர் தோளில் விழுந்த சிறு சால்வையைக்கூட அவர் எங்கும் எடுத்துச் செல்லாமல்
அப்படியே விட்டு சென்றிருந்த தன்னலமற்ற தலைவனின் பண்பு விழிகளை நனைத்தது.
அங்கு வந்திருந்த ஒரு வார இதழ் போட்டோகிராபர், கலாம் உதவியாளரிடம், ‘பாலு சார்’ (தனது
உதவியாளரை இப்படித்தான் அழைப்பார் கலாம்), அந்த கட்டில் அருகில் நின்று தலையணையை
தொடுங்கள்’ என்றார்.
‘சாரி சார். கலாம் சார் பயன்படுத்திய பொருட்கள் எதையும் நாங்கள் தொடமாட்டோம். அது
அவருக்கு நாங்கள் செய்யும் மரியாதை’ என்று பதைபதைப்புடன் அவர் மறுத்தார்.
நிஜம்தான். அவர் தொட்டு புழங்கிய பொருட்களில் இன்னமும் அவர் விரல் ரேகைகள் ஓடுகின்றன.
அவர் வசித்த அறைகளில் இன்னமும் அவரின் மூச்சுக்காற்று அலை மோதுவது போன்ற உணர்வு...
கலாம் வசித்த அறைகளில் நாம் இருந்த அந்த நிமிடங்கள், அவர் நம்மோடு துறுதுறுவென
பயணிப்பது போலவும், பேசிக்கொண்டிருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது.