Sunday, May 6, 2012

ஹே... ஹே... ஹே... ஹேய்ய்ய்!




அது ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரம். ஆண்டு தேர்வின் இறுதி நாள். அன்றோடு பரீட்சை முடிந்து மாணவர்களுக்கு கோடை விடுமுறை ஆரம்பமாகிறது. சென்னையில் உள்ள அந்த மெட்ரிக் பள்ளியில் நிசப்தம். ஒவ்வொரு வகுப்பறையாக சென்று மாணவர்களின் புத்தக பைகளை சோதனையிட்டனர் ஆசிரியர்கள். பட்டாசு, ராக்கெட், தீப்பெட்டி, கலர் பொடி, மை பாட்டில் இத்யாதிகளை அள்ளி எடுத்தனர். மாணவர்கள் முகத்தில் சோகம். போரில் வென்று நாடு திரும்பும் மாமன்னன் போல ஆசிரியர்கள் முகத்தில் களிப்பு.

கடிகாரம் 12.30 ஐ தொட, மணி ஒலித்தது. ‘ஹோ’வென்ற கூச்சல் எழ, வகுப்பறையில் இருந்து விடுபட்டு, படிகளில் தாவி, குதித்து, மைதானத்தில் புழுதி கிளப்பி, ஆடைகளில் செம்மண் அப்பிக்கொள்ள முகத்தில் மகிழ்ச்சி கொள்ளாமல் மாணவர்கள் வீதிக்கு வந்தார்கள்.
அடுத்த சில நொடிகளில், ஆண்டு முழுவதும் படித்து முடித்த புத்தகங்கள் காற்றில் பறந்தன.
‘பட,பட’ வென பட்டாசு சத்தம் ... ‘விர்’ என்று பறந்தன ராக்கெட்டுகள்... பையில் எடுத்துச் சென்றால் பிடிபடுவோம் என்று உணர்ந்த கில்லாடி மாணவர்கள் சிலர் மைதானத்தில்
செடிகள் இடையே மறைத்து வைத்துச் சென்றுள் ளனர்.
கலர் பொடிகள் முகத்தில் ரங்கோலி வரைய, பேனாவில் நிறைக்கப்பட்ட ஊதா மை, யூனிபார்மில் வண்ண சாரல் அடித்தது. ஆசை தீர ஆடி குதித்து மகிழ, உடற்கல்வி ஆசிரியரின் ஏழெட்டு ‘எச்சரிக்கை’ விசிலுக்குப்பிறகு தத்தம் இல்லம் நோக்கி புறப்பட்டனர்.
சென்னை பெருநகரில் படிக்கும் இதுபோன்ற பள்ளி குழந்தைகளுக்கு ஏன் ஆண்டு இறுதியில் மட்டும் இத்தனை சந்தோஷம்?.
காலில் செருப்புக்கூட இல்லாமல், தினமும் 2, 3 கி.மீ. தொலைவு நடந்து சென்று படிக்கும் கிராமப்பகுதி குழந்தைகளின் முகங்களில் எப்போதும்  இருக்கும் பிரகாசம் ஏன் நகர்ப்புற குழந்தைகளிடம் மிஸ்ஸிங்?.
எல்லாக் குழந்தைகளுக்கும் ‘பர்ஸ்ட்’ மார்க் பிரஷர். முதுகில் புத்தக சுமை. அதிகாலை எழுந்து அரக்கபரக்க பள்ளி கிளம்புவது.  அரைகுறை ‘பிரேக் பாஸ்ட்’. மாலை வரை பள்ளியில் பாடம். விளையாட்டு நேரத்தில்கூட மைதானத்தில் ஓட  அனுமதிக்காத விளையாட்டு ஆசிரியர். வீடு திரும்பியதும் மறுபடியும் படி, படி, படி.
பெரும்பாலான கல்விச்சாலைகள், ‘சிறைச்சாலைகள்’  போல மாணவர்களை நடத்துவதால், ஆண்டு தேர்வு முடியும் நாளை  ‘விடுதலை’ நாள் போல மாணவர்கள் கொண்டாடுகிறார்கள்.
கிராமப்புற குழந்தைகளுக்கு இந்த நெருக்கடி இல்லை. சுதந்திரம் அனுபவிக்கிறார்கள். வயல்களை கடக்கிறார்கள். ரயில்களை ரசிக்கிறார்கள். மரங்களில் இளைப்பாறுகிறார்கள். குளம், குட்டை, பம்ப்செட் என நீரில் விளையாடுகிறார்கள். பறவைகளை துரத்துகிறார்கள். இடையில் கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் மரத்தடி நிழலிலும், காற்றோட்டமான அறையிலுமாக கல்வி பயில்கிறார்கள்.
சென்னையில் படிக்கும் குழந்தைகளுக்கு வெகு சில ஆறுதலான பள்ளிகளும் இருக்கத்தான் செய்கின்றன. அப்படி ஒரு பள்ளியை நடத்துகிறார் முன்னாள் டிஜிபி ராஜ்மோகன்.
சென்னையில் இருந்து மகாபலிபுரம் செல்லும் சாலையில் கேளம்பாக்கம் அருகே ஐ.டி. நிறுவனங்கள் சூழ்ந்த பகுதியில் இவர் நடத்தும் பள்ளியில், மீனவ குப்பத்து குழந்தைகளும் படிக்கின்றனர்.
‘பள்ளி வளாகத்தில் ஒரு 10, 15 மாமரங்கள் வளர்க்கணும். மாங்காய்கள் காய்த்து தொங்கும்போது, ஒவ்வொரு வகுப்பா அனுப்பி, பசங்களை கல்லெடுத்து மாங்கா அடிக்க வச்சு, ஆசை, ஆசையா சாப்பிட வைக்கணும். அதான் சார் என் ஆசை’ என்கிறார் முகத்தில் பிரகாசம் மின்ன.  
நகரங்கள் சிட்டுக்குருவிகளை தொலைத்து நிற்பது  போல, ‘மெட்ரோ’ குழந்தைகள் இழந்த சந்தோஷங்களை மீட்டுத்தர இவர் போல பலர் இன்னும் தேவை சென்னைக்கு!.

அன்புடன் சேது

No comments:

Post a Comment

Comment as என்ற இடத்தில் Anonymous என்பதைத் தெரிவு செய்து கொள்ளலாம் அல்லது gmail அக்கவுண்ட் இருந்தால் google என்ற விவரத்தைத் தெரிவு செய்து கொண்டு, உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.