Tuesday, February 16, 2016

goodbye 2015
13 வயது இருக்கும்...
ஒரு நாள்,, டிரசிங் டேபிளில் இருந்த ஆளுயர கண்ணாடி முன் நின்றிருந்த
என் மகள், ‘அப்பா வளர்ந்துகிட்டே இருக்கேன். என் சிறு வயது போகின்றது.
வளர, வளர நிறைய பிரச்னைகளை சந்திக்கணும்...’ என்றாள்.

வளர்ச்சியின் மகிழ்ச்சியும், மழலை பருவம் கரைந்து போகும் ஏக்கமும் கலந்து அவளது
முகத்தில் பிரதிபலித்ததை உணர்ந்தேன்...
அவளின் 5 வயதில், உறங்குகின்ற பொழுதில் அவளது பிஞ்சு கரங்கள் என் கரங்களுக்குள் சிறைபட்டு இருக்கும். அந்த மிருதுவான ஸ்பரிசத்தில் இருவரும் உறங்கிப்போவோம்.
பருவ மாற்றங்கள், ஒரு தந்தையையும், மகளையும் பக்குவமாய் பிரித்தது... அந்த பிஞ்சு ஸ்பரிசங்களை இப்போதும் என் விரல்கள் தேடும். ஆனால், காலம் அவளை இப்போது கல்லூரிக்கு அனுப்பி இருக்கிறது.
எட்டு மாதத்திலேயே அவசர பிரசவம். இரண்டு கைகளுக்குள் அடக்கிவிடும் அளவுக்கு எடை குறைவாக, அணில் குட்டி போல பிறந்த அக்னி குஞ்சு அவன்.
5 வயது வரை பேச்சும், எழுத்தும் வரவில்லை. விழிகளில் துறுதுறுப்பு. செயல்களில் விறுவிறுப்பு. பென்சில், பேனா, கிரையான்ஸ் என எது கிடைத்தாலும் சுவர் முழுவதும் கிறுக்கி, கிறுக்கி வீட்டையே அழகாக்கினான் என் மகன்.
அதன்பிறகு ஒரு நாள் திடீரென வட்டம் போட ஆரம்பித்தான். எப்போது வரையத் தொடங்கினான் என தெரியாது பார்க்கும் உருவங்களை லாவகமாக அவன் விரல்கள் வண்ணம் தீட்டும்.
பூனை, நாய், பறவைகள், யானை பொம்மை, ரயில் இன்ஜின் என எதை பார்த்தாலும் அது என்ன ஏன், எப்படி என்ற கேள்வி அவனிடம் இருந்து பிறந்து கொண்டே இருக்கும். அவன் வரைந்து குவித்த ஓவிய மூட்டைகளை பத்திரபடுத்த முடியாமல் போனது.
டிசல் இன்ஜின், ரயில் பெட்டிகள், டைனோசர், பிரிடேட்டர், ரிமோட் கார்ஸ் பொம்மைகள்,
கிரிக்கெட் மட்டைகள், கால்பந்துகள், ரூபிக்ஸ் கியூப்கள் என எப்போதும் அவன் கரங்களில் தவழும்.
திடீர், திடீரென அவன் மனதின் வேகத்துக்கு அவை உருமாறும். நிறம் மாறும். அதன்பின் விதவிதமாக
மீன்கள் பற்றிய ஆராய்ச்சி. அலிகேட்டர், ஏஞ்சல்ஸ், புளோரான், பைட்டர்ஸ் என வீட்டு
மீன் தொட்டியில் விதவிதமான மீன்களின் படையெடுப்பு. அடுத்த தெருவில் இருக்கும் பள்ளிக்கூடத்துக்கு
21 கியர் வைத்த சைக்கிள். அதில் வேகமாய் படபடக்கும் பயணம்...
அப்பப்பா... ஒரு பொழுதில் அவன் ஆசைகள் தணிந்தன.
‘சயின்ஸ் குருப் வேண்டாம். நான், சினிமால டைரக்டர் ஆகப்போறேன்’ என்ற வார்த்தை உதிர்த்த நாளில்
அவனது பால்யம் தொலைந்ததாக உணர்ந்தேன்...
அரும்பு மீசைகள் எட்டிப்பார்க்கும் அவன் 2017ல் கல்லூரியில் கால் பதிக்க வேண்டும்...
இப்படியாக, 2015 ஆம் ஆண்டு என் குழந்தைகள் வாழ்வில் புதிய அடையாளங்களையும்,
இனி, அவர்களே முடிவுகள் எடுப்பார்கள். நாம், அதற்கான நல் வழியை மட்டும் காட்டவேண்டும் என்ற
புரிதல்களையும் தந்திருக்கிறது.
பேச்சுகளைவிட, மவுனங்களே பல சமயங்களில் சிறந்த தீர்வுகளை தந்திருக்கிறது...
அனேகமாக 2016ல் பேச்சு, எழுத்தை விட மவுனமே எனது மொழியாக இருக்கும். இன்னும் சில பதிவுகளுடன் முகநூலும் அன்னியமாக இருக்கும் என நினைக்கிறேன்...
goodbye 2015

No comments:

Post a Comment

Comment as என்ற இடத்தில் Anonymous என்பதைத் தெரிவு செய்து கொள்ளலாம் அல்லது gmail அக்கவுண்ட் இருந்தால் google என்ற விவரத்தைத் தெரிவு செய்து கொண்டு, உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.