Tuesday, February 16, 2016

இதோ புது ஆண்டு பிறக்க போகிறது...
செரிமான கோளாறு - அசிடிடியில் அடிக்கடி அவதியுறும் என்னிடம் ஒரு முறை அலுவலகம் வந்திருந்த டாக்டர் சுதா சேஷையன் சொன்னார்:
நீங்க ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்து கட, கட வென குடிக்காமல், மிகவும் மெதுவாக ஒவ்வொரு மடக்காக குடியுங்கள். ஒவ்வொரு மடக்கு தண்ணீரும் உங்கள் உள் உறுப்புகளை தொட்டு சில்லிட்டு பயணிப்பதை உணரலாம்...
அடுத்த சில மணி நேரத்தில் அதை பின்பற்றினேன். மனம் பரவசமானது. தண்ணீர் கூட அதிக சுவை தெரிந்தது ...
/அம்மா சுட்டு தந்த பணியாரத்தில் பரவி கிடக்கும் தேங்காய் சில்லுகளும், கடலை பருப்பையும் தேடி ருசிக்கும் போது அதன் சுவை அலாதிதான் ...
/ சுவாசத்தின் போது, தூய காற்றை நிதானமாக, உள்ளிழுக்கும் போது உறுப்புகளின் அசைவை உணரும் தருணங்கள் சுகமானவை...
இப்படி செயல்கள் எதுவாயினும் அதன் வழி மனதை செலுத்தினால் அந்த நொடிகளில் வாழ்க்கை ரசனையாகதான் இருக்கிறது..
காலத்தின் வயது் அதிகரித்து, இதோ புது ஆண்டு பிறக்க போகிறது...
பல ஆண்டுகளாய் நினைத்து பட்டியல் போட்டவைகளை 2016-ல் ஆவது பின்பற்ற வேண்டும்...
அதில் முதலாவதாக, அன்றாட அவசிய செயல்களை பட்டியலிட்டு, தேவையற்றவற்றில் கவனம் செலுத்தாமல் இருந்தாலே வாழ்கை சுவையாகும்...
சரவணபவன்ல காபி குடிப்பதை கட் பண்ணனும்...
வாரத்தில் ஒரு நாளாவது மெரீனாவில் காற்று வாங்கணும்...
கோப வார்த்தைகளை குழி தோண்டி புதைக்கணும்...
என இன்னும் பல பட்டியல் 2016க்காக காத்திருகிறது...
goodbye 2015
13 வயது இருக்கும்...
ஒரு நாள்,, டிரசிங் டேபிளில் இருந்த ஆளுயர கண்ணாடி முன் நின்றிருந்த
என் மகள், ‘அப்பா வளர்ந்துகிட்டே இருக்கேன். என் சிறு வயது போகின்றது.
வளர, வளர நிறைய பிரச்னைகளை சந்திக்கணும்...’ என்றாள்.

வளர்ச்சியின் மகிழ்ச்சியும், மழலை பருவம் கரைந்து போகும் ஏக்கமும் கலந்து அவளது
முகத்தில் பிரதிபலித்ததை உணர்ந்தேன்...
அவளின் 5 வயதில், உறங்குகின்ற பொழுதில் அவளது பிஞ்சு கரங்கள் என் கரங்களுக்குள் சிறைபட்டு இருக்கும். அந்த மிருதுவான ஸ்பரிசத்தில் இருவரும் உறங்கிப்போவோம்.
பருவ மாற்றங்கள், ஒரு தந்தையையும், மகளையும் பக்குவமாய் பிரித்தது... அந்த பிஞ்சு ஸ்பரிசங்களை இப்போதும் என் விரல்கள் தேடும். ஆனால், காலம் அவளை இப்போது கல்லூரிக்கு அனுப்பி இருக்கிறது.
எட்டு மாதத்திலேயே அவசர பிரசவம். இரண்டு கைகளுக்குள் அடக்கிவிடும் அளவுக்கு எடை குறைவாக, அணில் குட்டி போல பிறந்த அக்னி குஞ்சு அவன்.
5 வயது வரை பேச்சும், எழுத்தும் வரவில்லை. விழிகளில் துறுதுறுப்பு. செயல்களில் விறுவிறுப்பு. பென்சில், பேனா, கிரையான்ஸ் என எது கிடைத்தாலும் சுவர் முழுவதும் கிறுக்கி, கிறுக்கி வீட்டையே அழகாக்கினான் என் மகன்.
அதன்பிறகு ஒரு நாள் திடீரென வட்டம் போட ஆரம்பித்தான். எப்போது வரையத் தொடங்கினான் என தெரியாது பார்க்கும் உருவங்களை லாவகமாக அவன் விரல்கள் வண்ணம் தீட்டும்.
பூனை, நாய், பறவைகள், யானை பொம்மை, ரயில் இன்ஜின் என எதை பார்த்தாலும் அது என்ன ஏன், எப்படி என்ற கேள்வி அவனிடம் இருந்து பிறந்து கொண்டே இருக்கும். அவன் வரைந்து குவித்த ஓவிய மூட்டைகளை பத்திரபடுத்த முடியாமல் போனது.
டிசல் இன்ஜின், ரயில் பெட்டிகள், டைனோசர், பிரிடேட்டர், ரிமோட் கார்ஸ் பொம்மைகள்,
கிரிக்கெட் மட்டைகள், கால்பந்துகள், ரூபிக்ஸ் கியூப்கள் என எப்போதும் அவன் கரங்களில் தவழும்.
திடீர், திடீரென அவன் மனதின் வேகத்துக்கு அவை உருமாறும். நிறம் மாறும். அதன்பின் விதவிதமாக
மீன்கள் பற்றிய ஆராய்ச்சி. அலிகேட்டர், ஏஞ்சல்ஸ், புளோரான், பைட்டர்ஸ் என வீட்டு
மீன் தொட்டியில் விதவிதமான மீன்களின் படையெடுப்பு. அடுத்த தெருவில் இருக்கும் பள்ளிக்கூடத்துக்கு
21 கியர் வைத்த சைக்கிள். அதில் வேகமாய் படபடக்கும் பயணம்...
அப்பப்பா... ஒரு பொழுதில் அவன் ஆசைகள் தணிந்தன.
‘சயின்ஸ் குருப் வேண்டாம். நான், சினிமால டைரக்டர் ஆகப்போறேன்’ என்ற வார்த்தை உதிர்த்த நாளில்
அவனது பால்யம் தொலைந்ததாக உணர்ந்தேன்...
அரும்பு மீசைகள் எட்டிப்பார்க்கும் அவன் 2017ல் கல்லூரியில் கால் பதிக்க வேண்டும்...
இப்படியாக, 2015 ஆம் ஆண்டு என் குழந்தைகள் வாழ்வில் புதிய அடையாளங்களையும்,
இனி, அவர்களே முடிவுகள் எடுப்பார்கள். நாம், அதற்கான நல் வழியை மட்டும் காட்டவேண்டும் என்ற
புரிதல்களையும் தந்திருக்கிறது.
பேச்சுகளைவிட, மவுனங்களே பல சமயங்களில் சிறந்த தீர்வுகளை தந்திருக்கிறது...
அனேகமாக 2016ல் பேச்சு, எழுத்தை விட மவுனமே எனது மொழியாக இருக்கும். இன்னும் சில பதிவுகளுடன் முகநூலும் அன்னியமாக இருக்கும் என நினைக்கிறேன்...
goodbye 2015
பிரார்த்தனைகளால்தான்
வலியை மறக்க முடிகிறது...


ஒடிசலான தேகம். ஒரு மகன் உண்டு. இவர்தான் வீட்டு வேலை பார்த்து மகனை படிக்க வைத்தார். சில மாதங்களுக்கு முன் அறிமுகம் ஆனார்.
4, 5 வீடுகள் பெருக்குவார். அப்பார்ட்மென்ட் பெருக்கி, சுத்தம் செய்வார். பாத்திரம் கழுவி தருவார். கூடுதலாக, எந்த பொருளுக்கும், பணத்துக்கும் ஆசைப்படாத நடுத்தர வயது பெண்மணி அவர்.
சில நாட்களாக அவர் வரவில்லை. அலைபேசியும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
அபார்ட்மென்ட் நடைபாதையெங்கும் காய்ந்து, உதிர்ந்து கிடந்த இலைகள் மவுனம் பேசின...
கேன்சர் தினமான இன்று காலை அவரது தங்கை வந்தார். ‘சார், எங்க அக்காவுக்கு குடல்ல கேன்சராம். ஆஸ்பத்திரியில சேர்த்திருக்கோம். அவர் இனி வரமாட்டார்...’ என்றார்.
தன் உழைப்புக்கு வழங்கப்படும் ஊதியம் தவிர வேறு எதையும் எதிர்பார்க்காத எளிமையானவருக்கா இப்படி ஒரு சங்கடம்.
சில ஆண்டுகளாக எனது அம்மா, அவருக்கு தீபாவளி புடவை வாங்கும் இரண்டாக வாங்கி ஒன்றை அந்த பெண்ணுக்கும் தருவார். சிரிப்போடு பெற்றுக் கொள்வார்.
இறைவனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறேன், விரைவில் அவர் நலம் பெற வேண்டும் என்று!
பிரார்த்தனைகளால்தான் வலியை மறக்க, மறைக்க வேண்டி இருக்கிறது...
இப்படித்தான் சமீபத்தில் இன்னொரு வலி வந்து போனது...
எப்போதும் சிரிக்க, சிரிக்க பேசுவார் அந்த மாமி. ‘சாய் ராம்’ காபி சாப்பிடுங்க... ‘சாய் ராம் வீட்ல அம்மா, அப்பாலாம் சவுக்கியமா... என்று எல்லாரையும் பாபாவின் நாமம் சொல்லியே அன்பாக அழைப்பார்.
மேற்கு மாம்பலம் குடிவந்ததில் இருந்து கிட்டதட்ட 10 ஆண்டுகளாக பார்த்திருக்கிறேன் எப்போதும் பாபா சேவைக்காகவே அவரும், அவரது கணவரும் அர்ப்பணித்துக் கொண்டவர்கள்.
அவர் முதல் மாடியிலும், நாங்கள் 2வது மாடியிலுமாக குடிருந்தோம்...
திடீரென அவரது நடமாட்டம் குறைந்தது. அவர் வீட்டு கதவுகள் சாத்தியே இருந்தன. அவரது நடை, பாவனை, தோற்றத்தில் மாற்றம்.
‘உடல் நிலை சரியில்லை சாய் ராம்’ அவ்ளோதான் என்று அப்போதும் சிரித்தபடியே சொன்னார்...
சில மாதங்களுக்கு முன் அவர் தலை முடி உதிர்ந்து முகம் வெளிரத் தொடங்கி இருந்தது...
சென்னையில் 2 முறை பெரு மழை உச்சம் தொட்டன. அவர் ஒரு பிரபல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு முதல் மழையின் போது வெள்ளம் ஆஸ்பத்திரி உள்ளே புகுந்ததால் சிகிச்சை தொடரப்படாமல் வெளியேற்றப்பட்டார்.
இரண்டாவதாக, டிசம்பர் 1ம் தேதி கொட்டிய மழை நாளில் வேறொரு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தார். சிகிச்சைகள் தோற்றுப்போய் அவரது வாழ்க்கை பயணத்தின் இறுதி நாட்கள் அவை என்று அருகில் இருந்தவர்களுக்குக்கூட தெரியாது.
மறுநாள் சென்னையே வெள்ளக்காடான நாட்கள்...
‘சாய்ராம், என் மனைவிக்கு பிரஸ்ட் கேன்சர். பிழைப்பது கடினம்னு டாக்டர்கள் சொல்லிட்டாங்க. ஊருக்கெல்லாம் சேவை செய்தாள். மருத்துவ முகாம் ஏற்பாடு செய்து, எல்லாரையும் செக்கப் செய்துக்க சொன்னாள். அவ உடலை அலட்சியப்படுத்திட்டா - அவரது கணவர், நா தழுதழுக்க பேசினார் ...
கேட்பதற்கே அதிர்ச்சியாக இருந்தது...
வாழ்க்கை எத்தனை வலி மிகுந்ததாக இருந்தாலும், மரணம் இனிதாக, எளிதாக இருக்க வேண்டும் என்பதே எல்லாரின் ஆசையாக இருக்கும்.
அவரின் சிரித்த முகத்தை, மீண்டும் ஒருமுறை ஆஸ்பத்திரி படுக்கையில் பார்க்க என் மனம் தயாராகவில்லை...
வெள்ளம் வடிவதற்கு முன்பே அவரின் உயிர் பிரிந்துவிட்டது!
இல்லம் எடுத்து வரப்பட்ட அவரது உடலுக்கு மரியாதை செய்தோம்... இன்னமும் அவரது அன்புக் குரல் அபார்ட்மென்டில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
நண்பர்களுக்கு ஒர் அன்பு வேண்டுகோள்: வாழை இலையில் தரும் பார்சல் உணவுகளை மட்டுமே வாங்கி பயன்படுத்துங்கள். பிளாஸ்டிக் கன்டெய்னர், பாலிதீன் பைகளில் அடைத்துத்தரப்படும் சூடான உணவு பொருட்கள் உண்பதை தவிருங்கள். கேன்சருக்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அதில் இதுவும் ஒன்று.
எப்போது நினைத்து பார்த்தாலும்,
அப்பாக்கள் ஆச்சர்யமானவர்களே!


இன்று அப்பாவுக்கு 86ஆவது பிறந்தநாள்!
இறை அருளால், நான்கு தலைமுறை பார்த்துவிட்டார்...
வீடு, மனை, வாகனம் என எதற்கும் ஆசைபடாமல் 86 வயது கடக்கிறார்.
நோயற்ற வாழ்வே, குறைவற்ற செல்வம் என்பார். அதையே தினமும் 4 முறையாவது அவரது அம்மா - அப்பா படத்தின் முன் நின்று வேண்டுவார்...
உண்பதில் அவசரம் காட்ட மாட்டார். மிக பொறுமை. தினமும் 3 லிட்டர் க்கு மேல் தண்ணீர் குடிப்பார். வாழ்நாள் முழுக்க மோட்டார் வாகனம் தொட்டதில்லை. நடை அல்லது சைக்கிள்தான்.
அப்பாவின் கரம் பிடித்து, வைகை ஆற்றில் அழகர் இறங்கும் திருவிழா - மீனாட்சி கல்யாணம் - செல்லத்தம்மன் திருவிழா என மதுரையை சுற்றி வந்த ஞாபகங்கள் நெஞ்சில் ஜில்லிடுகின்றன.
திருநெல்வேலி மாவட்டம் ராஜவல்லிபுரத்தை பூர்விகமாக கொண்டவர். மதுரையில் வளர்ந்து, பின்னர் என்னுடன் கோவை, சென்னை என்று பயணப்பட்டார்.
அப்பா இல்லாத சமயங்களில், கொஞ்சம் அழகான, அப்பா சாப்பிடும் தட்டில் சாப்பிட, எங்கள் வீட்டில் 5 பிள்ளைகளுக்குள் ஒரு காலத்தில் போட்டி இருக்கும்...ஒரே ஆண் பிள்ளையான எனக்கு மட்டும் அப்பா தட்டு கிடைக்கும். சிலிர்க்கும் அன்றைய ஞாபகங்கள் இன்றைய கப் நூடுல்ஸ் குழந்தைகளுக்கு பிடிக்குமா தெரியவில்லை.
அடுத்தது என்ன என்ற எண்ணங்கள் மனதை வருடும்போது, ஒரு முறை கோவை ஸ்ரீ லலிதாம்பிகா பீடம் முனைவர் ஜகன்னாத சுவாமி கூறிய கதைதான் நினைவுக்கு வரும்...
ஒரு ராஜா. அரண்மனை ஜோசியரை அழைத்து எதிர்காலம் குறித்து கேட்கிறார்.
முன்று தலைமுறையும் ஓஹோ-னு வாழும் ஒரு பிரச்னையும் இல்லை ராஜா என்று சொல்லி கிளம்பினார்.
ராஜாவுக்கு சந்தோசம் ...
திடீரென்று மன கவலை ...
முன்று தலைமுறைக்கு பிறகு எப்படி இருப்பார்கள் என்று ஜோசியர் சொல்லவில்லையே ...
மீண்டும் அழைத்தார். ஜோசியர் வந்தார்.
சாரி, மன்னா, 4வது தலைமுறைக்கு பிறகு உன் வாரிசுகள் கஷ்டபடுவர்கள். அதான் நான் சொல்லவில்லை. ..என்று சொல்லி கிளம்பினார்.
கவலையில் ஆழ்ந்தார் ராஜா.
3 தலைமுறைக்கு பிறகு ராஜ்யத்தில் உள்ள என் வாரிசுகள் கஷ்டப்படுவர்களா ? இந்த வாழ்க்கை எதற்கு ?
கோட்டை துறந்து, காடு புறப்பட்டார்..
வழியில் ஒரு துறவி கண்டார். அவர் முகத்தில் பசி களைப்பு. தான் எடுத்து வந்த உணவை தந்தார்.
துறவி முகத்தில் மகிழ்ச்சி.
சுவாமி, அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வீர்கள்? பழங்கள் பறித்து தருகிறேன். எடுத்து செல்கிறீர்களா- என கேட்டான் ராஜா.
துறவி சிரித்தார்...
மன்னா, எனது 'அடுத்த வேளை உணவு' குறித்து, நான் எதற்கு கவலைபடவேண்டும்?.என்னை படைத்தவன் அல்லவா அது குறித்து கவலைப்பட வேண்டும். அவன் பார்த்துக் கொள்வான்.. என்று சொல்லி நடக்க ஆரம்பித்தார்.
அடுத்த வேளை உணவு குறித்தே துறவி கவலைப் படாமல் இருக்கிறார் . நாம், ஏன் 4 வது தலைமுறை கஷ்டம் பற்றி இப்போது வருந்தி இப்போது உள்ள வாழ்க்கையையும் இழக்க வேண்டும் என்ற ஞானம் பிறந்து மகிழ்ச்சியுடன் அரண்மனை பறந்தான் அரசன்...
- அந்த துறவியின் மன நிலையில் தான் எனது அப்பாவும் எப்போதும் இருப்பார்.
வீடு, வாகனம் பற்றிய எனது கவலைகளை காணும் போதெல்லாம், மரம் வச்சவன் தண்ணீ ஊத்துவான் ...உனக்கு எல்லாம் கிடைக்கும், கவலைப்படாதே!- என்பார்.
தன்னை கவலைகள் அண்டாமல் பார்த்துக் கொள்வார். அடிக்கடி கண்ணாடியில் முகம் பார்ப்பார். பல கோணங்களில் ரசித்துகொள்வார்...
கனவு, கவலை ஏதும் இன்றி, நிகழ் கால நிமிடங்கள் ஒவ்வொன்றையும் ரசனையாய் அனுபவிப்பார்...
எப்போது நினைத்து பார்த்தாலும், அப்பாக்கள் எப்போதும் ஆச்சர்யமானவர்களே!