Monday, June 4, 2012

வெளிக்காற்று உள்ளே வரட்டும்!


பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் சிலர் இன்ஜினியரிங் கல்வி புரியாமல் செமஸ்டர்களில் தோல்வி அடைந்து தற்கொலை தழுவினார்கள்...

ஒரு பெரிய பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு முடித்த இன்ஜினியரிங் மாணவர்களில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களே வளாக தேர்வில் தோல்வி அடைந்தார்கள்... இப்படி செய்திகள் வெளியாகின்றன. உயர்கல்வி மாணவர்களிடம் ஏன் இந்த தடுமாற்றம்?.
பள்ளி பருவத்திலேயே நமது மாணவர்களிடம் தலைமைப் பண்பு, படைப்புத்திறன், சமூக நோக்கம், எதையும் சந்திக்கும் ஆற்றல், தன் முனைப்பு போன்ற பிற திறன்களும் வளர்க்கப்பட வேண்டும். ஆனால், இன்று ‘மார்க் மிஷினாக’ மட்டுமே மாணவர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.
‘புத்தக மூட்டை’ சுமக்கும் மாணவர்களின் மன இறுக்கத்தை குறைக்க,  ‘வெளிக்காற்றை திறந்துவிடும்’ பள்ளிகள் இருக்கத்தான் செய்கின்றன. திருச்சி சமயபுரம் அருகே உள்ள ஒரு பள்ளி நிர்வாகம், மதிப்பெண்கள் மட்டுமே குறிக்கோளாக இல்லாமல், பள்ளி பருவத்திலேயே மாணவர்களின் கனவு சாலைகளை திறந்துவிடும் மகத்தான பணியை செய்கிறது.
‘கனவு மெய்ப்பட’ என்ற தலைப்பில் ஒவ்வொரு மாதமும் நடக்கும் அந்த நிகழ்ச்சியில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், ஓவியர்கள், எழுத்தாளர்கள், தலைவர்கள், சாதனையாளர்கள் என பல ‘அடையாள’ மனிதர்கள் அழைத்து வரப்பட்டு பேச, மாணவர்களிடம் அளவளாவ வைக்கப்படுகிறார்கள். அந்தவகையில், இறையன்பு,  சைலேந்திரபாபு, ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் போன்றோர் பங்கேற்று இருக்கிறார்கள். மாணவர்கள் மனதில் புதிய சிந்தனையை விதைக்க இந்த முயற்சிகள் கை கொடுக்கிறதாம்.
5ம் வகுப்பில் இருந்தே ஐஐடிக்கு பிள்ளைகளை தயார்படுத்தும் பெற்றோர்களின் போட்டி நிறைந்த சூழலில்,‘பேப்பரை எடு, பிரஸ் பிடி, வண்ணம் தீட்டு’ என சொல்வதெல்லாம் எடுபடுமா?’
‘இயல்பாகவே ஓவியம் வரைவதில் ஆர்வம் இருக்கும் ஒரு மாணவர், பிற்காலத்தில் அவர் படிக்கும், பணியாற்றும் துறையில் சிறப்பாக பிரகாசிக்க முடியும்’ என்று சஸ்பென்ஸ் தருகிறார் ஓவியர் ட்ராட்ஸ்கி மருது.
ஒரு கல்லூரி மாணவரின் இளமைத்துடிப்போடு பரவசமாய் இருக்கிறார்  மருது. 10, 15 ஆண்டுகளுக்கு முன்பே கணினி உதவியுடன் வண்ணம் தீட்டியவர். அனிமேஷன், டிஜிட்டல் ஓவியம், திரைப்பட கலை இயக்குனர் என பல்துறை வித்தகராக பிரகாசிக்கும் மருது சொல்லும் சூத்திரம் இது:
‘தான் நினைக்கும் கருத்தை, சுதந்திரமாக, விரும்பிய வண்ணத்தில் ஒரு வெள்ளை காகிதத்தில் ஓவியமாக தீட்ட பழகும் ஒரு மாணவனுக்கு, ஓவிய பயிற்சி மட்டும் கிடைக்கவில்லை. தான் நினைப்பதை, இடையில் யாருடைய தலையீடும் இல்லாமல் தானே வெளிப்படுத்தும் (கம்யூனிகேஷன் ஸ்கில்) திறனையும் சேர்த்தே பெறுகிறான்.
கருத்தும், கற்பனையும் கலந்து தான் நினைப்பதை ஓவியமாக தீட்டும் ஒரு மாணவர், பிற்காலத்தில் ஓவியராகத்தான் வர வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர் இளவயதில் எடுத்துக்கொள்ளும் இந்த பயிற்சி, அவர் எதிர்காலத்தில் எந்த துறையிலும், எந்த செயலிலும் துணிச்சலுடன் மற்றவர்களிடம் தன் கருத்தை பகிர்ந்து கொள்ள முடியும். மேலும், ஓவியம் பயிலும் மாணவனுக்கு எதையும் கூர்ந்து நோக்கும் பழக்கமும் வந்துவிடுகிறது. அது கல்வியில் சிறந்த ஆற்றல் பெற்று தருகிறது. இத்தனை சிறப்புமிக்க ஓவிய பயிற்சிகளை தங்கள் பிள்ளைகளுக்கு வழங்க முயற்சி எடுக்கும் பெற்றோரும், பள்ளி நிர்வாகங்களும் பாராட்டுக்குரியவர்கள்’ என்று பரவசமாகிறார் மருது.
- சேது

No comments:

Post a Comment

Comment as என்ற இடத்தில் Anonymous என்பதைத் தெரிவு செய்து கொள்ளலாம் அல்லது gmail அக்கவுண்ட் இருந்தால் google என்ற விவரத்தைத் தெரிவு செய்து கொண்டு, உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.